Archives: மார்ச் 2024

இன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தார்!

சார்லஸ் சிமியோன் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் பல்கலைக்கழகத்தில் சேரும் முன், அவருக்கு குதிரைகளும் ஆடைகளும் பிடிக்கும், ஆண்டுதோறும் தனது ஆடைகளுக்காக பெரிய தொகையை செலவிட்டார். ஆனால் அவரது கல்லூரியின் ஒழுங்கின்படி திருவிருந்து ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், அவர் நம்புவதை ஆராயத் தொடங்கினார். இயேசுவின் விசுவாசிகளால் எழுதப்பட்ட புத்தகங்களைப் படித்த பிறகு, அவர் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஒரு வியத்தகு மாற்றத்தை அனுபவித்தார். ஏப்ரல் 4, 1779 அன்று அதிகாலையில் எழுந்த அவர், “இயேசு கிறிஸ்து இன்று உயிர்த்தெழுந்தார்! அல்லேலூயா! அல்லேலூயா!” என கதறினார். அவர் ஆண்டவரைப் பற்றிய விசுவாசத்தில் வளர்ந்ததால், அவர் வேதாகம வாசிப்பு, ஜெபம் மற்றும் சபை ஆராதனைகளில் கலந்துகொள்வதில் தன்னை அர்ப்பணித்தார்.

முதல் ஈஸ்டர் அன்று, இயேசுவின் கல்லறைக்கு வந்த இரண்டு பெண்களின் வாழ்க்கை மாறியது. அங்கே ஒரு தூதன் கல்லைத் புரட்டி போட்டதால் பூமி மிகவும் அதிர்ந்ததை கண்டனர். அவன் அவர்களிடம், "நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்" (மத்தேயு 28:5–6) என்றான். மிகுந்த மகிழ்ச்சியில், ஸ்திரீகள் இயேசுவை பணிந்துகொண்டு, தங்கள் நண்பர்களுக்கு நற்செய்தியைச் சொல்ல ஓடினர்.

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை சந்திப்பது பண்டைய நாட்களில் மட்டும் நடப்பதல்ல; அவர் இங்கேயும் இப்போதும் நம்மை சந்திப்பதாக வாக்களிக்கிறார். கல்லறையில் பெண்கள் அல்லது சார்லஸ் சிமியோன் பெற்றது போன்ற ஒரு வியத்தகு சந்திப்பை நாம் அனுபவிக்கலாம், இல்லமல் போகலாம். இயேசு தம்மை நமக்கு வெளிப்படுத்துவது எத்தகைய விதமாயினும், அவர் நம்மை நேசிக்கிறார் என்பதை நாம் நம்பலாம்.

கிறிஸ்துவின் பேரன்பு

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் திரைப்படத்தில் ஜிம் கேவிசெல் இயேசுவாக நடிக்கும் முன், இயக்குனர் மெல்கிப்சன் இந்த பாத்திரம் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் திரையுலகில் அவரது தொழிலை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் எச்சரித்தார். இருப்பினும் கேவிசெல் அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், "அது கடினமாக இருந்தாலும் நாம் அதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

படப்பிடிப்பின் போது, ​​கேவிசெல் மின்னலால் தாக்கப்பட்டார், சுமார் இருபது கிலோ எடை குறைந்தார், மற்றும் கசையடி காட்சியின் போது தற்செயலாக சாட்டையால் அடிபட்டார். பின்னர், “மக்கள் என்னைப் பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதன் மூலம் மனமாற்றம் உண்டாகும்" என்றார். அந்த படம் கேவிசெல் மற்றும் படக்குழுவிலிருந்த மற்றவர்களை ஆழமாக பாதித்தது, மேலும் அதைப் பார்த்த லட்சக்கணக்கானவர்களில் எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றியது என்பதை தேவன் மட்டுமே அறிவார்.

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் என்பது, குருத்தோலை ஞாயிறு அன்று அவரது வெற்றி பவனியில் துவங்கி, அவர் அனுபவித்த துரோகம், கேலி, கசையடி, சிலுவையில் அறையப்படுதல் உள்ளிட்ட இயேசுவின் மிகப்பெரிய பாடுகளின் நேரத்தைக் குறிக்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் இச்சம்பவங்கள் காணப்படுகின்றன.

ஏசாயா 53 இல், அவருடைய பாடுகளும் அதன் விளைவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளன: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (வ.5). நாமெல்லாரும் "ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்தோம்" (வ.6). ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த காரணத்தால், நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடியும். அவருடைய பாடுகள் நாம் அவருடன் இருப்பதற்கான வழியை உண்டாக்கியது.

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர்.

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார்.

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம்.

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் 'மாண்டடம்' அதாவது "கட்டளை" என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்." (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, ​​நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் செய்ததை அவர்களுக்குச் சொல்

எனது கல்லூரி நண்பர் பில் டோபியாஸ் ஓர் தீவில் பல வருடங்களாய் மிஷனரியாக சேவை செய்துள்ளார். ஓர் இளைஞன் தன் சொந்த ஊரைவிட்டு வெளியேறி தனது அதிர்ஷ்டத்தைக் கண்டடையச் சென்றக் கதையைக் கூறுகிறார். ஆனால் வேறொரு நண்பர் அவரை தேவாலயத்திற்கு அழைத்துச் செல்ல, அங்கு அவர் இயேசுவின் நற்செய்தியைக் கேட்டு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டார்.

ஓர் இளைஞன் “பில்லிசூனியத்தில் மூழ்கியிருந்த” தனது மக்களுக்கு நற்செய்தியை எடுத்துச் செல்ல விரும்பினான். அதனால் ஜனங்களை சந்திக்க ஓர் ஊழியக்காரரைத் தேடினான். ஆனால் ஊழியக்காரரோ அவரிடம் “கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்” (மாற்கு 5:19 ஐப் பார்க்கவும்). அதைத்தான் அந்த இளைஞன் செய்தான். அவனது சொந்த ஊரில் பலர் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். அந்தப் பட்டணத்தில் இருந்த மாயவித்தைக்கார மருத்துவர் இயேசுவே “வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்” (யோவான் 14:6) என்று ஏற்றுக்கொண்டபோது மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. அவன் இயேசுவின்மேல் விசுவாசம் வைத்த பிறகு, அவரைப் பற்றி ஊர் முழுவதும் கூறினான். நான்கு ஆண்டுகளுக்குள், ஓர் இளைஞனின் சாட்சி அப்பகுதியில் ஏழு திருச்சபைகளை நிறுவ வழிவகுத்தது.

2 கொரிந்தியரில், கிறிஸ்துவை இன்னும் அறியாதவர்களுக்கு நற்செய்தியை அறிமுகப்படுத்துவதற்கான தெளிவான திட்டத்தை பவுல் முன்வைக்கிறார். அது அந்த இளைஞனுக்கு சொல்லப்பட்ட ஆலோசனையோடு ஒத்துப்போகிறது. “ஆனபடியினாலே... நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்“(2 கொரிந்தியர் 5:20). ஒவ்வொரு விசுவாசியிடமும் இயேசு எவ்வாறு அவர்களை புது சிருஷ்டியாய் மாற்றியிருக்கிறார் என்றும் தேவனோடு அவர்கள் எவ்விதம் ஒப்புரவானார்கள் என்றும் சொல்ல ஓர் தனித்துவமான கதை உள்ளது (வச. 17-18). அவர் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வோம். 

முத்தத்தோடு திருத்துதல்

ஜார்ஜ் மெக்டொனால்ட் “ஞானமுள்ள ஸ்திரீ” என்ற தனது உவமையில் இரண்டு சிறுமிகளின் கதையைக் கூறுகிறார். அவர்களின் சுயநலம் அவர்கள் உட்பட அனைவருக்கும் துன்பத்தைத் தருகிறது. ஓர் ஞானமுள்ள பெண் அவர்களை மாற்றுவதற்கு தொடர்ச்சியான சோதனைகளை கொடுத்து அவர்களை மீண்டுவரச் செய்கிறாள். அந்த இரண்டு பெண்களும் தங்களுக்கு நேரிட்ட ஒவ்வொரு சோதனையிலும் தோல்வியடைந்து அவமானம் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு ஆளான பிறகு, அவர்களில் ஒருவரான ரோசாமண்ட், தன்னை மாற்றிக்கொள்ள முடியாது என்பதை இறுதியாக உணர்ந்தாள். “உன்னால் எனக்கு உதவ முடியவில்லையா?” என்று அறிவுள்ள பெண்ணிடம் கேட்கிறாள். “இப்போது நீ என்னிடம் கேட்டால் ஒருவேளை என்னால் முடியலாம்” என்று அந்தப் பெண் பதிலளிக்கிறாள். புத்திசாலித்தனமான பெண்ணால் கிடைக்கப்பட்ட தெய்வீக உதவியால், ரோசாமண்ட் மாறத் தொடங்குகிறார். அப்போது அந்தப் பெண் தான் செய்த எல்லாப் பிரச்சனைகளையும் மன்னிப்பாளா என்று கேட்கிறாள். “நான் உன்னை மன்னிக்கவில்லை என்றால், உன்னை தண்டிக்க நான் ஒருபோதும் சிரமப்பட்டிருக்க மாட்டேன்” என்று அந்த பெண் கூறுகிறாள்.

தேவன் நம்மை சிட்சிக்கும் தருணங்கள் உள்ளன. ஏன் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். அவரது சிட்சையானது பழிவாங்குதல் மூலம் இயக்கப்படவில்லை, மாறாக நம் நலனில் தகப்பனின் அக்கறையால் இயக்கப்படுகிறது (எபிரெயர் 12:6). அவருடைய “பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டும்”, “நீதியாகிய சமாதான பலனை” (வச. 10-11) அடையும்பொருட்டும் அவர் விரும்புகிறார். சுயநலம் துன்பத்தைத் தருகிறது, ஆனால் பரிசுத்தம் நம்மை முழுமையாகவும், மகிழ்ச்சியாகவும், அவரைப்போல் “அழகாகவும்” மாற்றுகிறது. தன்னைப் போன்ற சுயநலமிக்க பெண்ணை எப்படி நேசிக்க முடியும் என்று அந்த புத்திசாலியான பெண்ணிடம் ரோசாமண்ட் கேட்கிறாள். அவளை முத்தமிட குனிந்து, “நீ என்னவாக இருக்கப் போகிறாய் என்பதை நான் பார்த்தேன்” என்று இவள் பதிலளித்தாள். தேவனுடைய சிட்சையானது அன்போடும், எதிர்காலத்தில் நாம் யாராக இருக்கப்போகிறோம் என்ற புரிதலோடும் வருகிறது.

பல வர்ண சுவர்

என் தோழி அவள் தீட்டிக் கொண்டிருந்த ஒரு நீர்வர்ண ஓவியத்தை என்னிடம் காட்டியபோது, வரைதிரையில் இருந்த சித்திரம் வேலூர் கோட்டை என்பதை அடையாளம் கண்டுகொண்டேன். நான் ஓவியர் அல்ல, ஆனால் யாராவது சுவருக்கு வண்ணம் தீட்டினால், அவர்கள் முழு சுவரையும் ஒரே வர்ணத்தில் பூசுவார்கள் என்று நான் கற்பனை செய்தேன். ஆனால், அவள் வரைந்த சுவர் நேர்த்தியாகப் பல வண்ணங்களிலிருந்தது. ஒரு கல் காவி நிறம், மற்றொன்று பொன்னிறம். ஒரு பாசி பச்சை மற்றும் ஒரு மாதுளை ஊதா கூட இருந்தது. நான் மிகவும் கவரப்பட்டு, “சுவர் எப்படி வித்தியாசமாக இருக்கிறது?” என்று கேட்டேன். அவள், "ஏனென்றால் ஒவ்வொரு கல்லும் ஒரு பாறையிலிருந்து வருகிறது, ஒவ்வொன்றும் வெவ்வேறு சாயல்களைக் கொண்டுள்ளது" என்று பதிலளித்தாள். அப்போதிருந்து, நான் ஒரு கல் சுவரைப் பார்க்கும்போதெல்லாம், அதன் பல கற்களின் அமைப்புகளையும், நிறங்களையும் மற்றும் வடிவங்களையும் என்னால் கவனிக்காமல் இருக்க முடியாது.

பேதுரு நம்மை "ஜீவனுள்ள கற்கள்" (வ.5) என்று அழைக்கிறார். என் தோழியின் ஓவியத்தில் உள்ள கற்களைப் போல, நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். நாங்கள் வெவ்வேறு பின்னணியிலிருந்து வருகிறோம் மற்றும் பலவிதமான அனுபவங்களைக் கொண்டுள்ளோம். ஆனால் கட்டிடத்திலிருந்து ஒதுக்கப்பட்ட கல் போல நாம் தனிமையில் வாழ வேண்டும் என்று அர்த்தமல்ல. மாறாக, தேவன் நம் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்து நம்மை ஒன்று சேர்த்தார் (வ.4). ஒரு கல் ஒரு சுவரை உருவாக்காது என்றாலும், தேவன் நம்மை ஒன்று சேர்க்கும்போது, அவர் நம்மை "ஆவிக்கேற்ற மாளிகையாக" (வ. 5) கட்டுகிறார். மூலைக்கல்லாகிய இயேசுவால் ஒன்றுபட்டு, நாம் "தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும்" (வ.5-9) ஆக்கப்படுகிறோம்.

நாம் நிராகரிக்கப்பட்டவர்களாகவோ அல்லது எங்கும் பொருந்த முடியாத அளவுக்கு வித்தியாசமானவர்களாகவோ உணரும்போது (வ.11-12), பேதுரு சொல்வதை நினைவில் கொள்வோம்: "அதின்மேல் (இயேசுவின்மேல்) விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை" (வ.6). தேவன் கட்டுவதில் ஒரு பகுதியாக இருக்க இயேசுவின் மூலம் நம்மைத் தேர்ந்தெடுத்தார் (வ.5). நமது தனித்துவம் தேவனின் சமூகத்தில் சரியாகப் பொருந்துகிறது.